Công ty in
Bài mới cập nhật
Loading...
Sunday, June 30, 2013

அம்பிகாபதி –திரை விமர்சனம்

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர். சிறு வயதிலிருந்து சோனம் கபூர் மீது தனுஷுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வருகிறது. அது இளம்பருவத்தை அடைந்ததும் காதலாக மாறுகிறது. சோனம் கபூரும் தனுஷ் மீது காதலில் விழுகிறார்.

இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார். இதனால் மனமுடையும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை விடாமல் தொடர்ந்து பழகி வருகிறார்.

இந்நிலையில் சோனம் கபூரின் விருப்பமின்றி அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இந்த திருமணத்தை நிறுத்த தனுஷ் உதவி செய்கிறார். இதையடுத்து தானும், அபேதியோலும் காதலிப்பதாக தனுஷிடம் சோனம் கபூர் சொல்கிறார். இதனால் வெறுப்படைகிறார் தனுஷ். இதன்பின் தனுஷ் காதல் என்னவாயிற்று? அபேதியோல், சோனம்கபூர் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பாலிவுட்டில் கிடைக்காத மிகப்பெரிய அறிமுகம் தனுஷிற்கு கிடைத்தள்ளது. நேர்த்தியான கதைக்களத்தை தனது அசாத்தியமான நடிப்பால் பாலிவுட்டில் நிரந்தர இடத்தை தனுஷ் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல..

சோனம் கபூர் அழகு பதுமையாய் வலம் வருகிறார். இவர் காதல் பண்ணுவது மட்டுமல்லாமல் அரசியல் மீதும், முரண்பட்ட சிந்தனைகள் மீது பற்று கொண்டவராகவும் களத்தில் தடம் பதித்திருக்கிறார். பள்ளி காலத்து பெண்ணாக வருவதாகட்டும், இளம்பருவத்தில் சுடிதாரில் வலம் வருவதிலும் நம்மை கவர்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் அபே தியோல். இவருடைய கதாபாத்திரம் நம்மை ரொம்பவுமே ஈர்க்கிறது.

படம் முதல் பாதி முழுவதும் காதல், இசை என்று பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் அரசியலில் இறங்கி, தட்டுதடுமாறி எல்லையைக் கடக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையினாலும், நடிகர்களின் எதார்த்த நடிப்பாலும் படத்தை ரசிக்க முடிகிறது. வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்துள்ள பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் தனது திறமையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்.

மாடர்ன் உடைகள் அணிந்து, உலக நாடுகளை சுற்றி பாட்டுப் பாடினால்தான் காதல் படம் என்று வரையறுக்கப்பட்ட பாலிவுட்டில், சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக முடிவெடுக்கும் நாயகியையும் வைத்து அழகான காதல் படம் உருவாக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ராய். நட்ராஜ் சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் ஹோலிப்பண்டிகை பாடலும், பனாரஸியா பாடலும் சபாஷ் போட வைக்கிறது.

மொத்தத்தில் ‘அம்பிகாபதி’ காதல் சின்னம்.

0 comments:

Post a Comment